Published : 05,Mar 2023 09:26 AM

ஆவடி: மனைவியின் கண் முன்னே கணவரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்

Aavadi-Mysterious-gang-who-hacked-the-rowdy-husband-to-death-in-front-of-his-wife

ஆவடி அருகே மனைவியின் கண் முன்னே ரவுடி கணவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த பொத்தூர், வள்ளி வேலன் நகரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32). பெயிண்டராக வேலை செய்து வந்த ரவுடியான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் யோகேஸ்வரன் வேலை முடிந்து வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் யோகேஸ்வரன் வீட்டினுள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

image

இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைக் கண்ட யோகேஸ்வரனின் மனைவி அலறி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து ரவுடியை கொலை செய்துவிட்டு அந்த மர்ம கும்பல் தாங்கள் வந்த வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், யோகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சுறா என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு யோகேஸ்வரன் தனது நண்பருடன் சேர்ந்து மீன் வியாபாரியான சுறாவை வீட்டிலேயே வைத்து வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. சுறாவின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த கொலை நடைபெற்றதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.

image

ஏற்கனவே ஒருசில மாதங்களுக்கு முன்னர் ரவுடி யோகேஸ்வரனை கொலை செய்யும் நோக்கில் சிலர் தாக்கியதும், அதில் யோகேஸ்வரன் தப்பிய நிலையில் போலீசாரின் மெத்தன போக்கால் இந்த கொலை நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்