Published : 11,Feb 2023 01:21 PM
அரியலூர்: திருமணமாகி 15 நாட்களே ஆன புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை!

அரியலூரில் திருமணமாகி 15 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை சுயநினைவை இழந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி. இவர் குடிபோதையில் உதயநத்தம் கிராமத்தில் கார்த்திக் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஜெயமணியை போனில் தொடர்புகொண்டு கார்த்திக் பேசியுள்ளார். இது சம்பந்தமாக ஜெயமணி தழுதாழைமேட்டைச் சேர்ந்த பவித்ரன் என்பவர் தான் தன்னை பற்றி தகவல் கூறியதாகக் கூறி, திருமணமாகி 15 நாட்களே ஆன பவித்திரனை தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் பவித்ரன் தந்தை சேட்டு என்பவரையும் தாக்கியுள்ளார்.
இதில் தலையில் வெட்டுபட்ட பவித்ரன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டு, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் அங்கிருந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். தற்போது பவித்ரன் கோமாவில் உள்ள நிலையில் மீன்சுருட்டி காவல் துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து ஜெயமணியை தேடி வருகின்றனர்.