Published : 06,Feb 2023 02:05 PM
துருக்கி நிலநடுக்கம்: இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

துருக்கி நாட்டில் இன்று அதிகாலை காசியான்தெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் பதிவான அதிபயங்கர நில நடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன், 500க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் கூறியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி, வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது.
இதுவரை துருக்கியில் குறைந்தது 284 பேர் மற்றும் சிரியாவில் 237 பேர் என 500க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை தெரிவித்துள்ளது. அதேபோல் சிரியாவில் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட கிட்டத்தட்ட 10 நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் அடிக்கடி நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்துவது அந்நாட்டு மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
கடந்த காலங்களில் 1999 ஆம் ஆண்டு துருக்கியில் 7.4 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000 பேர் பலியாகினர். இதில் தலைநகர் இஸ்தான்புல்லில் மட்டும் 1000 பேர் உயிரிழந்தனர். இதேபோல 2020 ஜனவரி மாதம் 6.8 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு அக்டோபரில் ரிக்டர் அளவில் 7.0 அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 114 பேர் பலியாகினர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.