Published : 04,Feb 2023 11:56 AM
"பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு அவசியம்" - சங்கர் ஜிவால்

பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு அவசியம் என சென்னை மாநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
அடையாறு தனியார் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்- அதற்கான சட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மற்றும் மகளிர் ஆணைய தலைவர் குமாரி, வழக்கறிஞர் ஆதி லஷ்மி பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்வில் மாணவர்களிடம் பேசிய காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் " பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்.அதேபோல்
அனைவரும் காவலன் செயலியை தங்களுடைய மொபைல் போனில் வைத்து கொள்ள வேண்டியது அவசியமானது. இது அவசர தேவைக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள முடியும்" என்றார்.
பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகள் தடுக்க காவல்துறை தனி கவனம் செலுத்தி வருவதாகவும், 80 சதவீதம் பெண்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவே பாதிக்கப்படும் நிலை இருப்பதாக காவல் ஆணையாளர் தெரிவித்தார். மேலும் பெண்கள் மீது தாக்குதல் நடந்தால் காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள விழிப்புணர்வு அவசியம் என்றும், பெண்கள் உதவிக்கு காவல்துறை மூலம் 181 என்ற எண்ணில் உதவிகளை பெறலாம் எனவும் தெரிவித்தார்.