Published : 29,Jan 2023 10:36 PM
கடைசி ஓவர் வரை திக்.. திக்.. திக்.. 100 ரன் இலக்கை போராடி வென்றது இந்திய அணி!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியதுடன் ஐசிசி பட்டியலிலும் முதலிடம் பிடித்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி, கடந்த 27ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, இந்தப் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி!
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான இரண்டாவது போட்டி, இன்று (ஜனவரி 29) லக்னோவில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய அவ்வணியின் பேட்டர்கள், இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முயலாமல் சீட்டுக்கட்டுப்போல் சரிந்தனர். அந்த அணியில் அதிகபட்சமான மிட்செல் சாட்னர் மட்டும் 19 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து சாப்மேன் மற்றும் பிரேஸ்வெல் ஆகியார் தலா 14 ரன்கள் எடுத்தனர்.
99 ரன்களில் ஆட்டமிழந்த நியூசிலாந்து!
இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங் 2 ஓவர்கள் வீசி 7 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். மற்ற பவுலர்கள் எல்லாம் தலா 1 விக்கெட் எடுத்தனர். பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க பேட்டர்களும் விரைவிலேயே நடையைக் கட்டினர்.
ரன் எடுக்க தடுமாறிய இந்திய அணி!
சுப்மன் கில் 11 ரன்னிலும், இஷான் கிஷன் 19 ரன்னிலும், ராகுல் திரிபாதி 13 ரன்னிலும் நடையைக் கட்டினர். வாஷிங்டன் சுந்தர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆக, துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புணர்ந்து ஆடினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் ஒன்று, இரண்டு ரன்களாகவே எடுத்தனர். நிறைய டாட் பந்துகள் ஆகிக் கொண்டே இருந்தன. அதனால், ஆட்டத்தில் இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையால் ஆட்டத்தில் பரபரப்பு மேலும் கூடியது.
கடைசி ஓவர் வரை பரபரப்பு
கடைசி ஓவரிலும் விரைவாக ரன் எடுக்கப்படவில்லை. கடைசி இரண்டு பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், சூர்ய குமார் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 19.5 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 26(31) ரன்களும், ஹர்திக் பாண்டியா 15(20) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
- ஜெ.பிரகாஷ்