
“திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 70 சதவிகிதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன; குறைகூற முடியாத ஆட்சி நடப்பதால் எதிர்க்கட்சியினர் தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்கின்றனர்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சேலம் மாசிநாயக்கன்பட்டி தனியார் பள்ளி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்கான கடனுதவி உள்பட ரூபாய் 222 கோடி மதிப்பில் 26,700 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். மேலும் ரூபாய் 200 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பல லட்சம் கோடி ரூபாய் கடனில் விட்டுச்சென்ற பிற்போக்கான ஆட்சிதான் முந்தைய காலத்தில் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 70 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 1,000 மாத உதவித்தொகை என பல்வேறு திட்டங்களால் மக்களும் பெண்களும் பலனடைந்து வருகின்றனர்.
இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மீதமுள்ள நிலையில், இன்னும் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியை பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியவில்லை; ஆட்சி குறித்து எந்த வித குற்றச்சாட்டும் சொல்ல முடியாத நிலையில்தான் எதிர்க்கட்சியினர் தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் பாசிசம் இல்லாத, முற்போக்கு வழியில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே போலிகளையும், துரோகிகளையும் நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்” என்று பேசினார்.