Published : 26,Jan 2023 10:47 PM

”எங்களிடம் ஆதாரம் இருக்கு” - அதானி குழுமத்துக்கு மீண்டும் ஹிண்ட்ன்பர்க் வெளியிட்ட அறிக்கை!

Hindenburg-report-back-to-Adani-Group

அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டன்பர்க் மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் மீண்டும் அறிக்கை

புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், ’இந்தியாவின் அதானி குழுமம் பங்குச் சந்தையில் ஏராளமான மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது’ என அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு அதானி குழுமம், ’இந்த அறிக்கை தவறானது’ எனப் பதில் அளித்திருந்தது. அதற்கு ஹிண்ட்ன்பர்க், இன்று மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு பதில் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், ”நாங்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தோம். அதானி குழுமம் அதுகுறித்து எங்களிடம் இதுவரை பேசவில்லை. எங்கள் அறிக்கையின் முடிவில், 88 கேள்விகளைக் கேட்டிருந்தோம். இது, நிறுவனத்திற்கு வெளிப்படையான தகவலைத் தந்துள்ளது என்று நம்புகிறோம். இந்தக் கேள்விகள் எதற்கும் அதானி குழுமம் பதிலளிக்கவில்லை. அதேநேரத்தில், எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். எங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையும் எதிர்கொள்ள தயாராய் இருக்கிறோம். அவர்களுடைய ஆவணங்கள் தொடர்பாக எங்களிடம் நீண்ட பட்டியல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

image

ஹிண்டன்பர்க் வெளியிட்ட முதல் அறிக்கை

புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், இந்தியாவின் அதானி குழுமம் பங்குச் சந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்துள்ளதாகவும், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அதானி நிறுவனத்தின் கடன் அளவுகள் அதிகரித்துள்ளது குறித்தும் கவலை தெரிவித்தது. மின்சார டிரக் தயாரிப்பாளரான நிகோலா கார்ப், ட்விட்டர் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளை குறைத்ததற்காக, ஹிண்டன்பர்க் நிறுவனம் பலராலும் அறியப்படுகிறது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், அடிப்படையில் 85 சதவீதம் பின்னடைவைக் கொண்டுள்ளன என ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், ஆவணங்களின் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சரிவில் அதானி குழுமம்

சில நாட்களுக்கு முன்னதாகவே அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது நிறுவனத்தின் 2.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்புகள் கடும் சரிவைக் கண்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் 31-ல் முடிவடைந்த நிதியாண்டு வரை, அதானி குழுமத்தின் மொத்த கடன்கள் 40% வரை அதிகரித்து 2.2 ட்ரில்லியன் ரூபாயாக உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்னர், அதானி துறைமுகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவை, நடப்பாண்டின் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்த மிகக் குறைந்த நிலையான 7.3%-க்கு சரிந்தது. அதே நேரத்தில் அதானி எண்டர்பிரைசஸ் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.7% சரிந்தது. அதானிக்கு சொந்தமான சிமெண்ட் நிறுவனங்களான ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் முறையே 6.7% மற்றும் 9.7% சரிந்தன.

image

அதானி குழுமம் பதில்

ரீஃபினிட்டிவ் தரவுகளின் அடிப்படையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனத்தின் கடன் சுமைகள் அதிகரித்துள்ளன. அதன்படி அதானியின் க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் கடன் சுமை 2,000 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிட்ச் குழுமத்தின் ஒரு பகுதியான கிரெடிட்சைட்ஸ், கடந்த செப்டம்பரில் அதானி நிறுவனங்கள் குழுவை அதிகப்படியாக விவரித்தது மற்றும் கடனில் கவலைகள் இருப்பதாக தெரிவித்தது. அறிக்கைக்குப் பின்னர், அதானி குழுமம் சில கணக்கீட்டு பிழைகளை சரிசெய்தாலும், அந்நியச் செலாவணி பற்றிய கவலைகளை பராமரித்ததாக கிரெடிட்சைட்ஸ் தெரிவித்தது.

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 2022-ம் ஆண்டில் 125% உயர்ந்தன. அதே நேரத்தில் குழுமத்தின் மின்சாரம் மற்றும் எரிவாயு அலகுகள் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் பங்குகள் 100%-க்கும் அதிகமாக உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங், “இந்த அறிக்கை தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கொண்ட தீங்கு விளைவிக்கும் கலவை” என கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்