Published : 21,Jan 2023 04:02 PM

”தனியொருவனுக்கு உணவில்லை என்றால்”-பசியால் வாடுவோரை தேடிச் செல்லும் ’No Food Waste’ அமைப்பு

No-Food-Waste--Food-for-the-homeless-

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. அவர் சொன்ன வரிகளின் படி இல்லையென்றாலும், பசியால் வாடிக் கொண்டிருக்கும் பலரின் பசிப்பிணியைப் போக்க இயன்ற அளவு முயற்சி செய்து கொண்டிருக்கிறது No Food Waste என்ற தன்னார்வ அமைப்பு.

image

உணவகங்களிலும், திருமணம், பிறந்தநாள் விழா என பல்வேறு சுப நிகழ்வுகளில் மீதமாகும் உணவுகளையும் பெற்று வறியவர்களின் பசியைப் போக்கி வருகின்றனர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஒரு சில நேரத்தில் உணவு கிடைக்கவில்லை என்றால் அவர்களாகவே முன்வந்து சத்தான உணவைத் தயார் செய்தும் உணவு கிடைக்காதவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள். இதற்காக சமையல் அறையையும் (Community Kitchen) ஆரம்பித்துள்ளார்கள். இதன் மூலம் பல்வேறு நிகழ்வுகளுக்கு உணவைத் தயார் செய்தும் கொடுத்து வருகிறார்கள்.

image

சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை அருகே உள்ள இரும்புளியூரில் உள்ள பழங்குடி இனத்தவருடன் பொங்கலை (Tribal Pongal) சிறப்பாகக் கொண்டாடி, பெண்களின் அதிகாரங்கள் பற்றியும், உணவு பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

image

No Food Waste சென்னை அமைப்பின் இயக்குனர் அருண்குமார் கூறுகையில், பழங்குடி இனத்தவர்களுடன் சேர்ந்து பொங்கல் விழாவைக் கொண்டாடியது புதுவித அனுபவமாக இருந்தது.சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆர்வமாகப் பங்கேற்று பொங்கல் விழாவைச் சிறப்பித்தனர்.

image

அங்குள்ள குடும்பங்களில் 25க்கும் அதிகமான குழந்தைகள் இருந்ததால், அவர்களை வைத்து கோலப் போட்டி, நடனப் போட்டி, பாடல் போட்டி, வாலி பால் போட்டி எனப் பலவற்றை நடத்தி சிறப்பித்தோம். பாரம்பரிய விளையாட்டான உறியடி, கரும்பு உடைத்தல் போன்ற விளையாட்டுகளில் பலர் ஆர்வமாகப் பங்கேற்றனர்.

image

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற பெற்றோர்களுக்கு பரிசுகளும், குழந்தைகளுக்கு பேனா, பென்சில்களும் கொடுத்து மகிழ்ந்தோம்.

image

போட்டிகள் முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டு விட்டு, அங்குள்ள சிறுவர்களுக்கு உணவின் முக்கியத்துவத்தையும், அதன் பாதுகாப்பையும் பற்றி எடுத்துரைத்தோம். பெண்களுக்காக "பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் (Women Empowerment)" பற்றிய விழிப்புணர்வையும் தெளிவாக எடுத்துரைத்து இந்த ஆண்டு பொங்கல் விழாவை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடினோம் என்று தெரிவித்தார் அருண்குமார்.

image

உங்கள் பகுதிகளில் மீதமாகும் உணவை (குறைந்த பட்சம் 50 பேருக்கு உணவு இருக்க வேண்டும்) பிறருக்குப் பகிர்ந்தளிக்க விரும்பினால் No Food Waste அமைப்பை (9962790877 / 7550290877) தொடர்பு கொள்ளலாம். அவர்கள் வீட்டிற்கே வந்து உணவைப் பெற்றுக் கொண்டு ஆதரவற்றவர்களுக்கும், பசியில் இருப்பவர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். அல்லது பசியில் இருப்பவர்களுக்கு நீங்களே உணவளிக்க விரும்பினால், பசியில் இருப்பவர்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் இவர்களைத் தொடர்புக் கொள்ளலாம். மேலும், #பட்டினிஇல்லாசென்னை-யை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது No Food Waste அமைப்பு.

உங்கள் அன்பானவர்களுக்கான விழாக்களை இவர்களோடு கொண்டாடுங்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்