Published : 13,Jan 2023 11:25 PM
”காவல்துறை அரசின் ஏவல் துறையாக செயல்படக் கூடாது” – பிரேமலதா குற்றச்சாட்டு

தமிழ் பற்றி பேசும் திமுகவிற்கு தமிழ் முறைப்படி சர்க்கரை பொங்கல் வைப்பது எப்படி என்று தெரியவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.
கோவை கணபதி பகுதியில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது...
”வெல்லத்தை பயன்படுத்தி செய்யப்படுவது தான் சர்க்கரைப் பொங்கல். ஆனால், திமுக அரசு பொங்கல் வைப்பதற்கு வெள்ளை சர்க்கரையை கொடுக்கிறது. தமிழ் பற்றி பேசும் திமுக-விற்கு தமிழ் முறைப்படி சர்க்கரை பொங்கல் வைப்பது எப்படி என்பது பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அதிமுக பொங்கல் விழாவையே மறந்து விட்டார்கள், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை மறக்கக்கூடாது” என்றவர் தொடர்ந்து...
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் பெண் காவலருக்கு வன்கொடுமை நடைபெற்றுள்ளது. அதற்கு காரணமான திமுக நிர்வாகி மீது நடவடிக்கை மேற்கொண்டு ஓராண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும். அதேபோல் காவல்துறை அரசின் ஏவல் துறையாக செயல்படக் கூடாது எனவும் பேசினார்.