Published : 07,Jan 2023 10:42 PM

எந்த வீரரும் செய்யாத புதிய சாதனை படைத்த சூர்யகுமார்!இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!

Suryakumar-has-set-a-new-record-that-no-player-has-done--India-won-the-series-by-defeating-Sri-Lanka-

இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற, இரண்டாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது இலங்கை அணி. இந்நிலையில் தொடர் யாருக்கு என்ற கடைசி மற்றும் 3ஆவது போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கி நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே ஓபனர் இஷான் கிஷானை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் மதுஷங்கா. பின்னர் களமிறங்கிய த்ரிப்பாத்தி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியை ஆட்டத்திற்குள் மீண்டும் எடுத்துவந்தார். 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசிய த்ரிப்பாத்தி 16 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் சுப்மன் கில்லுடன் கைக்கோர்த்த சூரியகுமார் யாதவ், இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிக்சர்கள், பவுண்டரிகளாக பறக்கவிட இந்திய அணியின் ரன்கள் உயர்ந்தது. நிதானமான தொடக்கத்தை கொடுத்த சுப்மன் 2 பவுண்டரிகள், 3சிக்சர்களோடு 46 ரன்களுக்கு வெளியேறினார்.

முதல் வீரராக சூர்யகுமார் செய்த புதிய சாதனை!

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யா, படுத்துகொண்டெல்லாம் லெக் சைடில் சிக்சருக்கு அனுப்ப, அவருக்கு எந்த இடத்தில் பந்துவீசுவதென்றே திணறினர் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள். 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என விளாசிய சூர்யா, டி20 இண்டர்நேசனல் போட்டிகளில் தனது 3ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

image

3 டி20 சதங்களை ஓபனராக களமிறங்காமல், பின்வரிசையில் விளையாடி அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்து, எந்த வீரரும் செய்யாத சாதனையை பதிவு செய்தார். 4 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த பட்டியலில் இருக்கும் ரோகித் சர்மா மட்டுமே இன்னும் அவருக்கு முன்னதாக இருக்கிறார்.

image

சூர்யகுமாரின் அதிரடியான சதத்தின் உதவியால் 20 ஓவர் முடிவில் 228 ரன்கள் குவித்தது இந்திய அணி. முதல் இன்னிங்க்ஸின் முடிவில் 51 பந்துகளுக்கு 112 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் சூர்யகுமார்.

தொடரை 2-1 என்று வென்ற இந்திய அணி!

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துறத்திய இலங்கை அணி, அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், 4.4 ஓவரில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கை அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவிற்கு திருப்பத்தை கொடுத்தார் சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல். பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 16.4 ஓவர் முடிவில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஹர்திக், இம்ரான், சாஹல் மூவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

image

91 ரன்களில் வெற்றிபெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்