Published : 21,Oct 2022 04:33 PM
மகனை கடைக்கு அனுப்பிவிட்டு 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - நீதிமன்றம் அதிரடி

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். மனைவி வேலைக்கு சென்ற பின், 12 வயது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் கூலித்தொழிலாளி.
இதேபோல் கடந்த 2017-ம் ஆண்டு மே 20-ம் தேதி மகனை கடைக்கு அனுப்பி விட்டு, மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், கூலித் தொழிலாளியான தந்தை தலைமறைவாகி விட்டார். பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுசம்பந்தமான வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தந்தை மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.