Published : 05,Oct 2022 08:46 AM
புதுக்கோட்டை: மதுபோதையில் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்ட கும்பல்கள்

புதுக்கோட்டையில் மது போதையில் இரண்டு கும்பல்களைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கிக் கொள்ளும் பகிரங்க காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னரில் தனியாருக்குச் சொந்தமான மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படுவதால் இங்கு அதிக அளவில் மது பிரியர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், இங்கு மது அருந்தி விட்டு வெளியே வந்த இரண்டு கும்பல்களுக்கு இடையே முன்விரோதம் காரணமாக நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மதுபான கடை எதிரே இரண்டு கும்பல்களும் பலமாக தாக்கிக் கொள்ளும் காட்சியை காண்டவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த மோதலில் மனப்பட்டியைச் சேர்ந்த தனியார் பேருந்து மேனேஜர் குணா, கடையபட்டியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுனர் பேச்சிமுத்து, கொத்தக்கோட்டையைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் பரமசிவம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நகர காவல் துறையினர். 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு 11 மணிக்கு மதுபோதையில் இரண்டு கும்பல் தாக்கிக் கொண்ட சம்பவத்தால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.