Published : 28,Sep 2022 04:16 PM
நரபலி கொடுக்கப்பட்டாரா முதியவர்?.. குழியில் உட்கார வைக்கப்பட்ட நிலையல் சடலம் மீட்பு!

ஓசூர் அருகே ஒன்றரை அடி ஆழ குழியில் உட்கார வைத்து முதியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (50). இவர், தனது இரண்டு மகன்களுடன் புதூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலைக்குச் சென்ற இரு மகன்களும் இரவு வீட்டிற்கு வராத நிலையில், லட்சுமணன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதையடுத்து இன்று காலை லட்சுமணன் மகன் சிவக்குமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தந்தை வீட்டில் இல்லாததால் வீட்டிற்கு முன்பு உள்ள வெற்றிலை தோட்டத்தில் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு லட்சுமணன் கொலை செய்யப்பட்டு சுமார் ஒன்றரை அடி ஆழ குழியில் உட்கார வைத்து எலுமிச்சம் பழம் மற்றும் கோழிளை அறுத்து பூஜை செய்த நிலையில் இருந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிவகுமார் உடனடியாக கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூஜைகள் செய்துள்ளதால் யாராவது நரபலி கொடுத்தாரா என்ற கோணத்தில் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.