Published : 19,Sep 2017 04:14 PM
கொல்கத்தாவில் மழை: பயிற்சியை ரத்து செய்தது இந்திய அணி

ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் இன்று மழை பெய்ததால் இந்திய அணி பயிற்சியை ரத்து செய்தது.
ஆஸ்திரேலிய அணியினர் உள் விளையாட்டரங்கில் பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை மறுதினம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் தினத்தன்று கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸி. அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஓவர்கள் குறைக்கப்பட்டதால் இரு அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு சமமாக உள்ளதாக கருதப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.