
கடலூரில் பள்ளி செல்லும் சிறுமியுடன் 25 வயது நபருக்கு நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை அடுத்த விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (25 வயது). இவருக்கும் மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த பள்ளி செல்லும் சிறுமிக்கும், 12.9.22 திங்கள்கிழமை விஜயமாநகரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
பெற்றோர் தரப்பில் திருமண பத்திரிகைகளும் அச்சடிக்கப்பட்டு விநியோகப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இத்திருமணம் குறித்து கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கும், சைல்டு ஹெல்ப்லைனுக்கும் ரகசிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சைல்ட் ஹெல்ப் லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர், சமூக நலத்துறை அதிகாரி, விருத்தாசலம் அனைத்தும் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அடங்கிய குழுவினர் சிறுமி வீட்டில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிறுமியின் வயது 18க்கு கீழ் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து, சிறுமி மீட்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவில் ஒப்படைக்கப்பட்டார். வகுப்பறைக்கு செல்ல வேண்டிய சிறுமியை மணவறைக்கு பெற்றோரே ஏற்றிய அவலம், இதன்மூலம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது.