
பெரியபாளையம் அருகே விஷமருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11-ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி மல்லியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பார்த்திபன் என்பவரின் 15 வயது மகள், ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ஆரணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், மேல் சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதை கண்டறிந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், பெரியபாளையம் கோயிலுக்கு மாணவி நடந்து சென்றதை தந்தை கண்டித்தது தெரியவந்தது. தந்தை கண்டித்ததால் மகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.