Published : 22,Jul 2022 12:23 PM
சத்தியமங்கலம்: ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்

ஆசனூர் பகுதியில் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகளால், மலைக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை ஆசனூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்து குடியிருப்பின் அருகே முகாமிட்டன. காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்ட மலைக் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இதுகுறித்து ஆசனூர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காலை நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டத்தில் முகாமிட்டதால் மலைக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.