Published : 07,Jul 2022 12:35 PM
சென்னை: சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் நிறுத்தி வைத்திருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணி கஜபதி தெருவின் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ கார் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் அதே தெருவில் உள்ள கார் மெக்கானிக் கடை வாசலில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீப்பிடித்து மளமளவென பரவி கார் முழுவதும் எரிந்து நாசமடைந்தது. இந்த வாகனம் யாருடையது என கண்டுபிடிக்க முடியவில்லை.
அதே பகுதியயைச் சேர்ந்த நபர்களும் காருக்கு உரிமை கோராத நிலையில், மெக்கானிக் கடைக்கு பழுது நீக்க கார் எடுத்து வரப்பட்டு இருக்கலாம் என்கிற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது விஷமிகள் யாராவது தீ வைத்து விட்டு சென்றார்களா? என்கிற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீ விபத்தில் இருந்து தப்பின.