கோவை: 3 வயது மகளுக்கு "சாதி, மதம் இல்லை" என சான்றிதழ் பெற்ற பெற்றோர்!

கோவை: 3 வயது மகளுக்கு "சாதி, மதம் இல்லை" என சான்றிதழ் பெற்ற பெற்றோர்!
கோவை: 3 வயது மகளுக்கு "சாதி, மதம் இல்லை" என சான்றிதழ் பெற்ற பெற்றோர்!

கோவையில் முதன்முறையாக தனது மூன்றரை வயது மகளுக்கு எந்தவித சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழை ஒரு தம்பதியர் பெற்றுள்ளனர்.

கோவை கே.கே.புதூரை சேர்ந்த நரேஷ் கார்த்திக் - காயத்ரி தமபதியினருக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தனது 3½ வயது மகளுக்கு மதம், ஜாதி சாராதவர் என்ற சான்றிதழை வருவாய்துறை மூலம் பெற்று உள்ளனர். குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலை வாய்ப்பு என அனைத்திற்கும் சாதி சான்றிதழ் அவசியமானது என்பதால் வருவாய் துறை வழங்கும் சாதி சான்றிதழில், சம்மந்தப்பட்டவரின் மதமும் குறிப்பிடப்படும்.

ஆனால், தன்னை பொறுத்தவரை கடவுள் என்பது அன்பு மட்டும் என்பதையும், அனைவரும் சமம் என்பதையும் தனது மகள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதால், "சாதி, மதம் சாராதவர்" என்ற சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சமீரன் உதவியுடன் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் பெற்றதாகக் கூறும் நரேஷ் கார்த்திக், இதன் மூலம் தனது மகளை எல்.கே.ஜியில் சேர்க்க பள்ளிகள் சில மறுத்து வருவதாகவும் கவலை தெரிவித்தார்.

மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என்று தமிழக அரசு கடந்த 1973 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் அரசாணை பிறப்பித்து உள்ளது. ஆனாலும் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாதி சான்றிதழ் அவசியமாகிறது. எதிர்காலத்தில் தனது மகள் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவைகளுக்கு அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளுக்கு விண்ணப்பிக்க மாட்டார் என உறுதிமொழி அளித்து இந்த சான்றிதழை பெற்றுள்ளார். கோவை மாவட்டத்தில் முதன்முறையாக இதுபோன்ற சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com