
“ஆளுநரின் கருத்துக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களில் மதுரை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று இரவு மதுரை விமானநிலையம் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து அவர் பேசுகையில் தமிழகத்தில் உள்ள கொரோனா நிலவரம் குறித்தும், தான் கடந்த 2 நாள்களில் மேற்கொண்ட ஆய்வு முடிவு குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், “கடந்த ஒரு வார காலமாக பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் பரவத் தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 3 மாதமாக கொரானா தொற்று நூற்றுக்கும், 50க்கும் கீழாக இருந்தது. கொரானா இறப்பு என்பது தற்போது வரை இல்லை. கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் கொரானா பரவிய நிலையில், தற்போது அது கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையில் 22 இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் 2, 3 என்ற அளவில் கொரானா பரவியுள்ளது.
இருப்பினும் மற்ற மாநிலங்களில் கொரானா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரானா மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மத்தியில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்தாத 1 கோடியே 63 லட்சம் பேரை தடுப்பூசி செலுத்த வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு இரண்டு சதவீதம் ரேண்டம் செக்கப் செய்யப்படுகிறது. மதுரையில் நாளொன்றுக்கு 600 பேர் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள். இவர்களில் 2% ரேண்டம் செக்கப் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தினந்தோறும் 15,000 பேருக்கு மேலாக கொரானா பரிசோதனை எடுக்கப்படும் நிலையில் தற்போது இரண்டு சதவீதம் அளவுக்குத்தான் கொரானோ பாதிப்புகள் ஏற்படுகிறது. ஒரு கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் 44 சதவீதம் படுக்கைகளில் நோயாளிகள் இருந்தாலோ அல்லது 10 சதவீத பாதிப்பு இருந்தாலோ தான் கட்டுப்பாடு விதிக்கலாம் என மத்திய அரசின் விதிமுறைகளில் உள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் கொரானா கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சூழ்நிலை இல்லை.
தமிழகத்தில் மருத்துவத்துத்துறை சார்பில் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்தப்படுகிறது. இப்படி ஆய்வு செய்யும்போது ஒரு சில இடங்களில் செயல்பாடுகள் நன்றாக உள்ளதை காண்கிறோம். ஒரு சில இடங்களில் குறைகள் உள்ளன. இது காலப்போக்கில் சரிசெய்யப்படும். சரியாகும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
இவற்றை தொடர்ந்து `வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே சனாதன தர்மம் கூறுகிறது’ என ஆளுநர் பேசியது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆளுநரின் பேச்சுக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” எனக்கூறினார். பின்னர் தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு நிலவரம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுத்துவது குறித்தும், குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
“உலகம் முழுவதும் குரங்கு அம்மை 22 நாடுகளில் பரவியுள்ளது. இருப்பினும் மதுரை போன்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு அந்நகரில் இருந்து பயணிகள் வராத போதும் டிரான்சிட்டர் முறையில் பயணிகள் வருகிறார்களா என்பதை கண்காணிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. பயணிகளின் முகத்தில் கொப்பளம் கை கால்களில் புண் மற்றும் கொப்புளம் இருந்தால் அவர்களுடைய மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு என்பது இல்லை. சென்னையில் ஒருவருக்கு முகத்தில் வித்தியாசமான கொப்பளங்கள் இருந்ததால் அது ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் அவருக்கு குரங்கம்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி உள்ளார். மேலும் மருத்துவத்துறை அமைச்சர் என்ற முறையில் 7,8 முறை நானும் துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன். அதன் விளைவாக அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். மருத்துவமனை தொடங்குவதற்கு முன் மாணவர்சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளனர். அந்த அடிப்படையில், இராமநாதபுரம் கல்லூரியில் 50 எய்ம்ஸ் மாணவர்கள் பயின்று வருகின்றனர். எய்ம்ஸ் இயக்குனரை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசியுள்ளேன். அவர் மருத்துவமனையின் டிசைன் தயாராகிக் கொண்டு இருப்பதாக தெரிவித்து கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு மாதத்தில் மருத்துவமனையின் டிசைன் தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசைன் கிடைக்கப் பெற்றதும் அதற்கு அனுமதி பெறப்பட்டு டெண்டர் கோரப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும்.
கடந்த ஆட்சி காலத்தில் இதனை கண்டுகொள்ளாமல் விட்டார்கள் தற்போது நாம் அதை துரிதப்படுத்தி உள்ளோம். நிதி ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இரண்டு மாதத்தில் டிசைன் பெறப்பட்டு டெண்டர் வழிமுறைகள் செய்யப்பட்டு பணிகள் தொடங்கும். எப்படியாக இருந்தாலும் இன்னும் ஐந்து ஆறு மாதத்திற்கு எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு நாம் காத்திருக்க வேண்டும்” என்றார்.
- மணிகண்டபிரபு