Published : 26,May 2022 07:35 AM
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்

காஷ்மீரில் டிக்டாக் மூலம் பிரபலமான பெண் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் பட் (35). இவர் கடந்த இரண்டு வருடங்களாக டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இதனால் அவர் காஷ்மீர் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவர் தனது வீட்டுக்கு முன்பு இருந்த தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தீவிரவாதிகள், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சத்தத்தை கேட்டு அங்கு வந்த அவரது சகோதரர் மகன் ஃபர்ஹான் சுபைர் (10) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே அம்ரீன் பட் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ஃபர்ஹான் சுபைர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
தொடரும் தாக்குதல்...
காஷ்மீரில் அண்மைக்காலமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு, பாதுகாப்புப் படையினரை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது பொதுமக்களில் சில தரப்பினரும் தீவிரவாதிகளின் இலக்காக மாறி வருகின்றனர். குறிப்பாக காஷ்மீர் பண்டிட்டுகள், சீக்கியர்கள், காவல்துறையில் பணிபுரியும் இஸ்லாமியர்கள், இஸ்லாம் சட்டத்திட்டங்களை மீறுவதாக கருதப்படும் முஸ்லிம்கள் ஆகியோர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் சைஃபுல்லா காத்ரி என்ற காவலரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.