'இதுவே அதிகபட்சம்': இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

'இதுவே அதிகபட்சம்': இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்
'இதுவே அதிகபட்சம்': இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1.68 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்  மொத்த ஜி.எஸ்.டி. வரி வருவாய் 1,67,540 கோடி ரூபாய். இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரியாக 33,159 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி. வரியாக 41,793 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி 81,939 கோடி ரூபாயும்  (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் 36,705 கோடி ரூபாயும், வசூல் மற்றும் பொருட்கள், மற்றும்  அதன் தீர்வை வரியாக 857 கோடி ரூபாய் உட்பட) தீர்வைத் தொகையாக 10,649 கோடி ரூபாய் அடங்கும்.



2022-ம் ஆண்டு ஏப்ரல்  மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் முன்னெப்போதையும் விட அதிகமாகும். இது கடந்த மார்ச் மாதம் வசூலான ஜி.எஸ்.டி. தொகையான 1,42,095 ரூபாயை விட  25,000 கோடி ரூபாய் அதிகம். ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு 33,423 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 26,962 கோடி ரூபாயும் மத்திய அரசு விடுவித்துள்ளது.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 20% அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 30% அதிகரித்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த வருவாயை விட 17% அதிகமாகும். முதல் முறையாக மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 1.5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்ட மொத்த மின்வழி சீட்டுகளின் எண்ணிக்கை 7.7 கோடியாகும். இது பிப்ரவரி மாதத்தில் உருவாக்கப்பட்ட 6.8 கோடி மின்-வழிச்சீட்டுகளை விட 13% அதிகமாகும், இது வணிக செயல்பாடுகளின் விரைவான மீட்சியை பிரதிபலிக்கிறது. இது வரி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட  பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக,வரி செலுத்துவோரை சரியான நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பான ஜி.எஸ்.டி. நடைமுறைகளின் தெளிவான முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.



தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட தவறு செய்யும் வரி செலுத்துவோர் மீது கடுமையான  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் மாதத்தில் 9,724 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 8,849 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூலானது. முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் 10% உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com