Published : 07,Apr 2022 01:09 PM
எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்த குழந்தை: விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை

கன்னியாகுமரி மாவட்டம் காதலனுடன் திருமணம் செய்து கொள்ள விஷம் கொடுத்து குழந்தையை கொன்று நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (34) கார்த்திகா (21) தம்பதியருக்கு சஞ்சனா என்ற 3.5 வயது பெண் குழந்தையும், சரண் என்ற 1.5 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக கூலி வேலைக்குச் சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு கார்த்திகா தகவலளித்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த ஜெகதீஷ், குழந்தை சரணை தூக்கிக் கொண்டு மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல் துறையினர் குழந்தை சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் விஷப்பொடியை குழந்தையே சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும் குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி தாய் தந்தையை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது கார்த்திகாவின் செல்போனிற்கு வந்த சென்ற அழைப்புகள் அழிக்கபட்டிருந்தன. இது தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த செல்போன் எண்ணை பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது.
இதில், மாரயபுரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் அதிகநேரம் பேசியிருப்பதும் இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பலமுறை பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகாவிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சுனிலை காவல் கஸ்டடியில் விசாரித்ததில் அவர் கார்த்திகாவிற்கு திருமணமாகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும் அந்த தகவல் தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கார்த்திகா அளித்த வாக்குமூலத்தில் காதலில் மூழ்கி இரண்டு குழந்தைகளை கொன்றால் அவன் ஏற்றுக்கொள்வான் என நினைத்து சந்தேகம் வராமல் இருக்க வீட்டில் எலித்தொல்லை இருப்பதாக கணவரிடம் பாலிடா எலி மருந்து பொடியை வாங்கிவரச் சொல்லி அதை ஊர்மக்கள் பார்வைக்கு படும்படி வீட்டைச் சுற்றி தூவியுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமிய உப்புமாவில் எலி பொடியை கலந்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மூத்த குழந்தை குறைவாக உப்புமா சாப்பிட்டதால் பிழைத்துக் கொண்டது. இந்த விசயம் தாமதமாக தெரியவரவே மூத்த குழந்தைக்கு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து போலீசார், கார்த்திகாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.