Published : 05,Sep 2017 08:31 AM
மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடித்துவிட்டு கரை திரும்பியுள்ளனர். அவர்கள் கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட பகுதியில் வந்துகொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் தமிழக மீனவர்களின் 500க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்களையும், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளால் தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டி அடித்து அட்டுழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக மீனவர்கள் பலர் பலத்த காயம் அடைந்ததுடன், படகு ஒன்றிற்கு தலா ரூ.30 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சுஷ்மா சுவராஜின் இலங்கை பயணத்தின் போது தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்த நிலையில், தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.