Published : 23,Feb 2022 06:34 PM
“நீங்கள் புற்றுநோயிலிருந்து மீண்டது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” - யுவராஜ் குறித்து கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பணியை பாராட்டி அவருக்கு ‘கோல்டன் பூட்’ ஒன்றை பரிசாக கொடுத்ததுடன் செறிவான வார்த்தைகளுடன் மனதை உருக்கும் கடிதம் ஒன்றையும் தன் கைப்பட எழுதி அனுப்பியிருந்தார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இந்நிலையில் அதற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் விராட் கோலி.
“எனக்கு நீங்கள் கொடுத்த அற்புதமான பரிசுக்கும், அபரிமிதமான அன்புக்கும் நன்றி. அதுவும் எனது கிரிக்கெட் வாழ்வின் தொடக்க நாட்களிலிருந்து என்னை பார்த்த ஒருவரிடமிருந்து வந்துள்ளது சிறப்பானதாகும். உங்கள் வாழ்க்கை மற்றும் புற்றுநோயிலிருந்து நீங்கள் மீண்டு வந்தது என அனைத்தும் அனைத்து மக்களுக்கும் எந்நாளும் இன்ஸ்பிரேஷனாகும்.
உங்களை சுற்றி இருப்பவர்கள் மீது நீங்கள் எப்போதும் அக்கறையுடன் இருப்பீர்கள். நீங்கள் யார் என்பதை நான் நன்கு அறிவேன். இப்போது நாம் இருவரும் பெற்றோர்கள். இது மதிப்புமிக்க ஒரு ஆசீர்வாதம். உங்களது இந்த புதிய பயணத்தில் மகிழ்வுடன் நீங்கள் இருக்க விரும்புகிறேன்” என கோலி தெரிவித்துள்ளார்.
யுவராஜ் மற்றும் கோலி என இருவருக்கு இடையிலும் நெருக்கமான நட்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.
தொடர்புடைய செய்தி: “உலகத்திற்கு நீங்கள் கிங், ஆனால் எங்களுக்கு..” - விராட் கோலிக்கு யுவராஜ் உருக்கமான கடிதம்