Published : 31,Jan 2022 04:38 PM
டெல்லி: தாயாரை இழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட 40 வயது மருத்துவர்

லண்டனில் மருத்துவராக பணிபுரிந்துவந்த 40 வயது பெண், டெல்லியிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
மேகா காயல் என்ற அந்தப் பெண் சமீபத்தில் தனது 79 வயது தாயை இழந்துள்ளார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அந்தப் பெண், தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாகவும், மேலும் தற்கொலை குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேகா காயல் லண்டனிலுள்ள மில்டன் கினெஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்துள்ளார். அதற்குமுன்பு டெல்லி அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்திருக்கிறார். நோய்வாய்ப்பட்டிருந்த மேகாவின் தாயார் கடந்த 27ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய தந்தையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் மேகாவின் அண்ணி இன்று காலை 7.30 மணியளவில் அவருடைய அறையை தட்டியிருக்கிறார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் போலி சாவியைக்கொண்டு அறையை திறந்திருக்கிறார். அப்போது மேகா தொடையில் காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
உடனடியாக அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால் அதற்குமுன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மேலும் போலீசாருக்கு மருத்துவமனை கொடுத்த தகவலின்பேரில் தற்போது போலீசார் மேகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். மேலும் இதுகுறித்து விசாரித்துவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.