
லதா மங்கேஷ்கருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு (92) கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயதைக் கருத்தில் கொண்டு, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன்படி, லதா மங்கேஷ்கர் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த சமீபத்திய தகவலைப் பற்றி அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் பிரதித் சம்தானி கூறுகையில், ''லதா மங்கேஷ்கர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். லதா மங்கேஷ்கர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.