Published : 16,Jan 2022 07:15 AM
தமிழகத்தில் 2வது வாரமாக இன்று முழு பொதுமுடக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று இரண்டாவது வாரமாக முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்றைய தினம் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி-நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் முற்றிலும் இயங்காது. ஹோட்டல்களில் பார்சல் சேவை செயல்படும். குறைந்த எண்ணிக்கையிலான மின்சார ரெயில்கள் மட்டும் ஓடும். ரயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்லலாம். காவல்துறையினர் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிப்பது அவசியம். முழு பொதுமுடக்கத்தையொட்டி தமிழகம் முழுவதும் 60ஆயிரம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சென்னையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொள்கின்றனர். எனவே முழு பொதுமுடக்கமான இன்று அவசிய தேவையின்றி வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. இரண்டாவது வாரமாக இன்று முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.