Published : 26,Aug 2017 12:24 PM
சென்னை வந்தார் ஆளுநர்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர்ராவ் சென்னை வந்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் பரிந்துரை செய்தார். ஆனால் தங்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது எனவும், கொறடா உத்தரவை தாங்கள் மீறவில்லை எனவும் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் கூறினர். மேலும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிருப்தி எம்ல்ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிரான நிலை எடுத்த போது அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர்ராவ் மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார்.
முன்னதாக இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத் தமிழ்ச் செல்வன், ஆளுநர் தங்களை இரண்டு நாட்களில் சந்திப்பதாக கூறியிருப்பதாகவும், அவர் சந்திக்க வாய்ப்பு அளிக்கவில்லை எனில் குடியரசுத் தலைவரைச் சந்திப்போம் எனவும் கூறினார். அதே போல் டிடிவி தினகரனும் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளர். இதனிடையே ஆளுநரைச் சந்திக்க திமுக சார்பிலும் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.