
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. நேற்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா, தனது இன்னிங்ஸில் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இந்த இன்னிங்ஸ் உட்பட அவர் கடைசியாக விளையாடிய 20 டெஸ்ட் இன்னிங்ஸில் மூன்று முறை டக் அவுட்டாகி உள்ளார். ஆறு முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ளார். இரண்டு முறை மட்டுமே அரை சதம் பதிவு செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர்கள் 117 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தபோதும் புஜாராவின் டக் அவுட் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் கே.எல்.ராகுலின் சதம் இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில்தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் செயல் ‘டக் அவுட்டான’ புஜாராவை புன்னகைக்க செய்துள்ளது. விரக்தியுடன் பெவிலியன் திரும்பிய புஜாரா, டிரஸ்ஸிங் ரூமிலிருந்து ஸ்டேண்ட்ஸுக்கு (Stands) வர, அவரை டிராவிட் கடந்து செல்கிறார். அப்போது புஜாராவின் வலது தோள்பட்டையில் தட்டிக் கொடுத்துவிட்டு செல்கிறார் டிராவிட். உடனே புஜாரா புன்னகைக்கிறார். ‘அடுத்த இன்னிங்ஸில் பார்த்துக் கொள்ளலாம்’ என துவண்டு கிடந்த புஜாராவுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்துள்ளது டிராவிட்டின் செயல்.
இந்திய கிரிக்கெட் அணி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்கள் விளையாடி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்துள்ளது. மழையினால் இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் கைவிடப்பட்டுள்ளது.