Published : 18,Dec 2021 07:04 PM
புதுக்கோட்டை: திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்ற குடும்ப விழா

திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரச்னையால் பிரிந்து கவுன்சிலிங் மூலம் இணைந்து வாழும் தம்பதிககள் கலந்து கொண்ட குடும்ப விழா நடைபெற்றது.
கணவன் மனைவியிடையே பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக புகார் அளிக்கப்பட்டு அவர்கள் இருவரையும் அழைத்து விசாரணை செய்து கவுன்சிலிங் வழங்கப்படும். இதுபோன்று கவுன்சிலிங் வழங்கப்பட்டு மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு சென்று எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாக வாழக்கூடிய தம்பதியினரை அழைத்து குடும்ப விழா நடத்தப்படும்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று குடும்ப விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசிய அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரேஷ்மா, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றால் இலவச தொலைபேசி 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை காவலர் நாகஜோதி, முதுநிலை காவலர்கள் ஜோஸ்பின் மேரி, மகாலட்சுமி, வளர்மதி, கௌசல்யா மற்றும் காவலர் கார்த்திகை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.