Published : 07,Dec 2021 09:48 PM
பிரதமர் மோடி, அமித்ஷா, சோனியாகாந்தி: பிரபலங்களின் பெயரில் போலி தடுப்பூசி சான்றிதழ்

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா, ஒமைக்ரான் என புதுப்புது திரிபு கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என உலக நாடுகளின் அரசுகள் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருகின்றன. சில நாடுகளில் பூஸ்டர் குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன.
இப்படியாக உலக மக்களை கொரோனா கிலி ஏற்படுத்திக் கொண்டிருக்க அதையே ஜாலியாக எடுத்துக் கொண்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த சில விஷமிகள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் அக்ஷய் குமார் என பிரபலங்களின் பெயரில் போலியாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் என்ற தரவுகளை தயாரித்துள்ளனர்.
இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள Karpi பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த கம்யூட்டர் ஆப்பிரேட்டர்கள் இந்த போலி தரவுகளை அப்லோட் செய்தது தெரியவந்துள்ளது. அவர்கள் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனராம். தடுப்பூசி செலுத்திய பயனர்கள் மற்றும் RT-PCR சோதனை மேற்கொண்டவர்களின் தரவுகள் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் மேல் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக இதனை செய்ததாக கம்யூட்டர் ஆப்பிரேட்டர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்.
இருப்பினும் மாநிலத்தின் மற்ற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் இதே போல முறைகேடு நடந்துள்ளதா என்பதை அறிய மற்ற இடங்களிலும் பயனர் விவரங்களை சரிபார்க்கும் பணியை அந்த மாநில அரசு முன்னெடுத்துள்ளதாம்.
பீகார் மாநிலத்தில் 8,63,52,436 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 3,09,64,634 இரண்டு டோஸ்களை பெற்றுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகள் சொல்கின்றன.
இதையும் படிக்கலாம் : இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணமும் சில கேள்விகளும்?