
தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா தொற்று, கடந்த ஒரு மாதமாக சிறிதளவு உயரத் தொடங்கியிருக்கிறது.
கடந்த மே 21 ஆம் தேதி ஒரே நாளில் 36,184 பேருக்கு தொற்று உறுதியானது. அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் தொற்று உறுதியாகும் சதவிகிதம் 20ஆக இருந்தது. சில தினங்கள் சராசரியாக 450 உயிரிழப்புகளை தினசரி சந்தித்தது தமிழகம். நவம்பர் முதல் வாரத்தில் அதாவது 7 மாதங்களுக்கு பிறகு தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து 1000க்கும் கீழிறங்கி 990 எனப் பதிவானது. இந்நிலையில் ஒரே மாதத்தில் மீண்டும் மெல்ல கோவிட் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 731 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 1,06,505 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முந்தைய நாளில் 711 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில் சற்றே எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறித்து பதிலளித்துள்ள மருத்துவத்துறை, பரிசோதனை உயர்த்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள உயர்வு இது எனத் தெரிவித்துள்ளது. பாசிடிவிட்டி 0.7 சதவிகிதமாக ஆக தொடர்வதை சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.