Published : 02,Nov 2021 02:11 PM
இந்தியாவில் 259 நாள்களில் இல்லாத அளவில் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 259 நாள்களில் இல்லாத அளவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,423 ஆக உள்ளது. அதே நேரத்தில் 15,021 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக 24 மணி நேரத்தில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் ஒரே நாளில் 52 லட்சத்து 39 ஆயிரத்து 444 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 106 கோடியே 85 லட்சத்து 71 ஆயிரத்து 879 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.