Published : 17,Oct 2021 07:21 AM
கனமழையால் சபரிமலை செல்வதற்கு பக்தர்களுக்கு தடை

கேரளாவில் தொடர் மழை காரணமாக வரும் 19 ஆம் தேதி வரை சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டிருப்பதால், பிற பகுதிகளில் இருந்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல வரும் 19 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்காக கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதே போல், வரும் 18 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளாவில் கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.