Published : 09,Oct 2021 07:46 PM
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் : மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் உள்ளது குறித்து மத்திய அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோட்டயத்தை சேர்ந்த எம்.பீட்டர் என்பவர் தற்போது வழங்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையை பறிப்பதாக சொல்லி நீதிமன்றத்தை முறையிட்டிருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இரண்டு வாரங்களில் இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் விளக்கம் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மனுதாரர் பீட்டர் மற்ற நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழையும் நீதிபதியின் பார்வைக்காக சமர்ப்பித்திருந்தார். அதில் அந்த நாட்டு தலைவர்களின் படம் இடம் பெறவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.
மேலும் மத்திய அரசும், பிரதமரும் அவர்களது கடமையைதான் செய்தனர். அதனால் சான்றிதழில் படம் கூடாது எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த படம் சிக்கலை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.