செஸ் வரியை கைவிட்டால், நாங்கள் ஜிஎஸ்டிக்குள் வருகிறோம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

செஸ் வரியை கைவிட்டால், நாங்கள் ஜிஎஸ்டிக்குள் வருகிறோம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
செஸ் வரியை கைவிட்டால், நாங்கள் ஜிஎஸ்டிக்குள் வருகிறோம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி யின் கீழ் கொண்டு வரும் விவகாரத்தில் வரி நிலைமை மாறியதால் நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாகவும், ஒன்றிய அரசு செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி-க்குள் வர தயாராக உள்ளதாகவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தீனதயாய் அந்தியோதயா யோஜனா மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியிம் 250 சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்வில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் 2018 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தார்.

2018 ஆம் ஆண்டுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் பெட்ரொல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2001 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 10 டாலராக இருந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130 டாலராக விற்பனை செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் போது நேர்முக வரி 55 பைசாவாகவும், மறைமுக வரி 45 பைசாவாகவும் இருந்தது.

பன்னாட்டு நிறுவனங்களுக்காக நேர்முக வரியை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு குறைந்து கொண்டது. பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது பெட்ரோல் வரி 10 ஆகவும், டீசல் வரி 5 ரூபாயும் இருந்தது. தற்போது பெட்ரோல் வரி 32 ஆகவும், டீசல் வரி 31 ஆகவும் உள்ளது. மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்காமல் வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரலாம் என ஒன்றிய அரசு சொல்லவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பில் கொடுப்பட்டதை ஒன்றிய அரசு சுட்டி காட்டியுள்ளது. ஜி.எஸ்.டி வரி வரம்பு குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசும் விரும்பவில்லை, மாநில அரசுகளும் விரும்பவில்லை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்து உள்ளதால் மக்கள் மீது இரு மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேர்முக வரியை 100 சதவீதம் ஒன்றிய அரசே எடுத்து கொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரொல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது.

மாநில வரி வருவாய் ஒன்றிய அரசு எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்? நிலைமைக்கு ஏற்ப வரியை மாற்றம் செய்யும் உரிமையை மாநில அரசு இழந்து விட்டது. தமிழகத்தில் சூழ்நிலை, சுற்றுச்சூழல் மாறும் போது திமுகவின் நிலைப்பாடும் மாறும். பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயாராக உள்ளோம். ஒன்றிய அரசுக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே பெட்ரோல் , டீசல் விலையில் விதிக்கப்படும் செஸ் வரியை கை விட்டால் ஜி.எஸ்.டி வரிக்குள் வருகிறோம்'' என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com