மியாவாகி காடுகள் வரமா? சாபமா? - என்ன சொல்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்?

மியாவாகி காடுகள் வரமா? சாபமா? - என்ன சொல்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்?
மியாவாகி காடுகள் வரமா? சாபமா? - என்ன சொல்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்?

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டை பசுமைப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வரும் மாநகராட்சிகள் மற்றும் தன்னார்வ குழுக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் உள்ள வார்த்தை 'மியாவாகி காடுகள்'.அதாவது குறுங்காடுகள். ஆனால், இந்த குறுங்காடுகள், வனத்தின் லட்சியத்தை நிறைவேற்றுகின்றனவா என்பது பெருங்கேள்வியே என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மியவாகி முறையில் காடுகளை உருவாக்குதல் பிரபலமாகி வருகிறது. ஜப்பானின் தாவரவியலாளர் அகிரா மியாவாகியால் தோற்றுவிக்கப்பட்டதே மியாவாகி காடுகள். சாதாரணமாக ஒரு வனம் உருவாக குறைந்தபட்சம் 100 ஆண்டுகளாவது தேவைப்படும் நிலையில், மியாவாகி முறையில் 25 முதல் 30 ஆண்டுகளுக்குள் குறுங்காடுகளை உருவாக்கிவிட முடியும். மியாவாகி முறையில் நடும்போது ஒருமரத்துக்கும் இன்னொரு மரத்துக்குமான இடைவெளி 60 சென்டிமீட்டர்தான். இயற்கையாக உருவாகும் வனங்களில் சராசரியாக ஒரு ஏக்கரில் 300 மரங்கள் வரை வளரும். ஆனால் மியவாகி முறையில் உருவாக்கப்படும் காடுகளில் ஒரு ஏக்கரில் 4 ஆயிரம் மரங்களை நடமுடியும்.

சென்னையை பொறுத்தவரை 20 லட்சம் ரூபாய் செலவில் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்  மியாவாகி வனம் உருவாக்கப்பட்டது. அதுபோலவே 1,000 மியவாகி காடுகளை உருவாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக முன்னாள் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடந்த வருட இறுதியில் கூறினார். குறைந்த காலகட்டத்திற்குள் ஒரு இடத்தை பசுமையானதாக மாற்றிட மியாவாகி முறை உதவுகிறது. குறுகிய நிலப்பரப்பிலேயே இம்முறையை செயல்படுத்த முடியும் என்பதால் தனிநபர்கள் கூட தங்களுக்கு சொந்தமான இடங்களில் அடர்வனங்களை உருவாக்க முடியும். வீடுகள், கல்வி நிலையங்கள், சாலையோரத்தில் உள்ள வெற்றிடங்கள் என எங்கு வேண்டுமானாலும் நிலத்தை பதப்படுத்தி மியாவாகி காடுகளை உருவாக்கலாம். ஆனால் அதே நேரத்தில் மியாவாகி காடுகளில் வளரும் மரங்கள் இயற்கை வளர்ச்சி தடைபட்டு வலிமையற்றதாக இருக்கும் என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்

சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் சக்தி மியாவாகி முறையில் வளர்க்கப்படும் மரங்களுக்கு இருக்காது என்றும் தாவரவியலாளர்களும், சூழலியல் ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். அதிக இடைவெளியுடன் வளரும் மரங்கள் மூலம் பூமிக்கு கிடைக்கும் பலன்கள் போல மியாவாகி முறையில் வளரும் மரங்களிடமிருந்து கிடைக்காது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. மியாவாகி முறையில் வளர்க்கப்படும் மரங்கள் பரந்து விரிந்து வளராமல் மேல்நோக்கியே வளர்கின்றன. குறிப்பாக இயற்கை பேரிடர்களை தாங்கும் திறன் இந்த மரங்களுக்கு இருக்காது என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மியாவாகி முறையில் வளரும் மரங்களினால் பூமிக்கு பலன் ஏதும் இருக்காது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. இதனால் மியாவாகி முறையை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com