Published : 09,Aug 2017 08:51 AM
சிறையில் தந்தையை காண வந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், சிறையில் இருக்கும் தந்தையை காண வந்த குழந்தைகளின் முகத்தில் சிறை நிர்வாகம் முத்திரை குத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போபால் மத்திய சிறையில் தந்தையை காண சென்ற ஒரு சிறுவனுக்கும், அவன் சகோதரிக்கும் சிறை நிர்வாகத்தினர் முகத்தில் முத்திரை குத்தி உள்ளே அனுமதித்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த குழந்தைகளின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் இவ்விவகாரம் குறித்து புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து போபால் மத்திய சிறையில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து விளக்கம் கேட்டது. சிறையில் இருக்கும் மற்ற சிறார்களிடம் இருந்து தந்தையை காண வந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே முத்திரை குத்தியதாக சிறை நிர்வாகம் இதற்கு விளக்கமளித்தது.
சிறை நிர்வாகத்தின் விளக்கம் அப்பகுதி மக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், மாநில அரசு இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள சிறைத்துறை அமைச்சர் குசும் மெடிடேலே, "முகத்தில் முத்திரை குத்திய சம்பவம் குறித்து விசாரணைக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். சம்பவத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் விசாரனைக்கு உட்படுத்தப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து, குழந்தைகளுக்கான மத்திய பிரதேச ஆணையத்தின் தலைவர் டாக்டர் ராகவேந்திரா பேசுகையில், "இது ஒரு பயங்கரமான சம்பவமாகும். சிறைச்சாலைகளில் சிறுவர்களின் முகங்கள் மீது நுழைவு முத்திரையை குத்தியது குழந்தைகளின் மனதில் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை ஏன் சிறைத்துறை அதிகாரிகள் உணரவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய சிறை அதிகாரிகளிடமிருந்து நாங்கள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம்’ எனக் கூறினார்.