
இந்திய எல்லையை ஒட்டி மிக உயரமான கம்பத்தில் தனது தேசியக் கொடியை பறக்க விட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
வாகா - அட்டாரி எல்லைப்பகுதியில் 400 அடி உயரத்தில் கம்பத்தை பாகிஸ்தான் நிறுவி வருகிறது. இது எல்லையில் இந்தியா அமைத்துள்ள கொடிக்கம்பத்தை விட 50 அடி உயரம் அதிகம். வரும் 14 ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று புதிய கம்பத்தில் கொடி பறக்க விடப்பட உள்ளது.
இந்தக் கொடி 120 அடி அகலத்தில் உலகின் 8-வது பெரிய தேசியக் கொடியாக இருக்கும் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனால் எல்லைப் பகுதியில் உள்ள இந்தியர்கள் கவலை கொண்டுள்ளனர். கொடிக்கம்பத்தின் மேல் கேமரா அமைத்து இந்தியப் பகுதி உளவு பார்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து இந்திய அரசு தங்கள் எதிர்ப்பை பாகிஸ்தானிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.