குழந்தைக்கு அப்பா யார்? - சென்னை பெண்ணின் 46 ஆண்டுகால உரிமைப் போராட்டம்

குழந்தைக்கு அப்பா யார்? - சென்னை பெண்ணின் 46 ஆண்டுகால உரிமைப் போராட்டம்
குழந்தைக்கு அப்பா யார்? - சென்னை பெண்ணின் 46 ஆண்டுகால உரிமைப் போராட்டம்
திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியவரை தன் கணவர் என நிரூபிப்பதற்காக, 46 ஆண்டுகள் உரிமைப் போராட்டம் நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர்.
1974-ம் ஆண்டு கொளத்தூர் முருகன் நகரைச் சேர்ந்த விஜயகோபாலன் என்பவரும், இளவரசியும் காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதிக்காததால் விஜயகோபாலனும் இளவரசியும் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருவில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு சென்னைக்கு வந்து மயிலாப்பூர், வால்டாக்ஸ் ரோடு, கெல்லீஸ் கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து ஏழு மாதமாக ஒரே வீட்டில் இருவரும் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் விஜயகோபாலன் வேலை கிடைத்த காரணத்தால் ஐதராபாத்திற்கு சென்றுள்ளார். அப்போது இளவரசி கர்ப்பமாக இருந்திருக்கிறார். வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும்படி கூறிவிட்டு விஜயகோபாலன் சென்று விட்டதால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான இளவரசிக்கு 1975-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு தந்தை யார் என உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் கேட்டு அவமானப்படுத்தியதால் மேலும் மனவேதனைக்கு உள்ளான இளவரசி 1975-ம் ஆண்டு செம்பியம் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டு விஜய கோபாலன் ஏமாற்றி விட்டதாகவும் தனக்கு பிறந்த குழந்தைக்கு அவர் தான் தந்தை எனவும் நடவடிக்கை எடுக்கக்கோரி இளவரசி புகார் கொடுத்தார்.
புகார் கொடுத்ததோடு சரி மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. 1985-ஆம் ஆண்டு விஜயகோபாலன் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது இளவரசிக்கு தெரியவந்தது. அப்போது விஜயகோபாலன் காவல் துறையில் பணியில் சேர்ந்து காவலராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
போலீசார் விசாரணை செய்ததில், விஜயகோபாலன் காவல் நிலையத்திற்கு வந்து இளவரசிக்கும் அவரது குழந்தைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தக் குழந்தை எனக்கு பிறக்கவில்லை. அந்தக் குழந்தை என்னுடையது என நீங்கள் நிரூபித்தால் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று கூறிவிட்டு இளவரசியையும் அவமானப்படுத்தி விட்டு சென்றுள்ளார்.
விஜய கோபாலன் தன்னை ஏமாற்றிச் சென்ற பிறகு இளவரசி தனக்கும் தன் மகளுக்கும் சட்டரீதியிலான நீதி கிடைக்க வேண்டும் என்றே 46 ஆண்டுகள் போராடியுள்ளார். காவல்துறையில் 17 மனுக்களை கொடுத்தாலும் கூட காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குள் விஜய கோபாலன் காவல்துறையில் உதவி ஆய்வாளரானார்.
இந்நிலையில் இளவரசி 2010-ம் வருடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து விஜயகோபாலன் தான் தன் குழந்தையின் தந்தை என நிரூபிக்க நீதிமன்றத்தை நாடினார். அதன் பிறகு 2020-ஆம் ஆண்டு 10 வருடங்கள் கழித்து டிஎன்ஏ பரிசோதனையில் இளவரசிக்கு பிறந்த தேவி என்ற பெண் குழந்தை, விஜய கோபாலனுக்கு பிறந்தது என்று டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் கூட ஒரு ஆண்டாக காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் இருந்தது. கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களை கூறி வந்த காவல்துறையினர் கடந்த 16-ம்தேதி காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள விஜய கோபாலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அயனாவரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விஜய கோபாலன் மீது 294- ஆபாசமாக திட்டுதல், 509- பெண்ணை மானபங்கப்படுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டிஎன்ஏ சோதனை மூலம் தன்னுடைய தந்தை விஜய கோபாலன் தான் என்பதனை நீதிமன்றம், ஊருக்கு சொல்லியிருப்பதாக இளவரசியின் மகள் தேவி மனமகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார். இதனால் தானும் தாயாரும் சந்தித்த வேதனைகள், அவமானங்கள் கொஞ்சமல்ல என்கிறார் தேவி.
46 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகளுடன் பரிதவித்து வந்த இளவரசி, சுமார் 36 வருட சட்டப் போராட்டத்துக்கு பிறகு விஜயகோபாலன் தான் தனது கணவர் எனவும், அவர் மூலம் தனக்கு பெண் குழந்தை பிறந்தது என்பதையும் நிரூபித்துள்ளார். தாமதப்படுத்தபட்ட நீதியே கிடைத்தாலும் ஆறுதலாக பார்க்கின்றார் இளவரசி.
- சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com