Published : 04,Aug 2017 02:51 PM
இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

இறப்பை பதிவு செய்து சான்றிதழ் பெற இறந்தவர் மற்றும் பெறுபவரின் ஆதார் எண்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2017 அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இறப்புகளை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிகளின்படி இறப்புச் சான்றிதழ் பெற உயிரிழந்தவரின் ஆதார் எண்ணும், சான்றிதழ் கோருபவரின் ஆதார் எண்ணும் கட்டாயம் வழங்கப்படவேண்டும்.
இந்த புதிய விதி இன்று முதல் (ஆகஸ்ட் 4) அமலுக்கு வந்துள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி முதல் இது கட்டாயமாக்கப்பட உள்ளது. ஜம்மு-காஷ்மீரைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அடையாள அட்டைகளை முறைகேடாக பயன்படுத்துவதை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எரிவாயு, உரம் உள்ளிட்ட அரசின் மானியத்தொகையை, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு பெறுவதிலிருந்து அவசர தேவைக்காக பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் வரை ஆதார் எண் எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.