Published : 31,Jul 2017 01:56 AM
படப்பிடிப்புகளை தடை செய்தால்... பெப்சிக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை

பெப்பி தொழிலாளர்கள், சினிமா படப்பிடிப்புகளை தடை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கு தயாரிப்பாளர் சங்கம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக நீங்கள் அறிவித்திருப்பது வருத்தத்திற்குரியது. இந்நிலையில் நாங்கள் வழக்கம்போல தயாரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளோம். ஆகவே எங்கள் உறுப்பினர்களின் படப்பிடிப்பிற்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என உங்கள் உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம். அப்படி நிகழ்ந்தால் நாங்கள் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
மேலும் இந்த நேரத்தில் தங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். தொழிலாளர்கள் என்றைக்கும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. நாங்கள் எந்த ஒரு நிலையிலும் பெப்சியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று கூறவில்லை. ஆனால் பெப்சியுடன் மட்டும்தான் வேலை செய்யவேண்டும் என்பதை மட்டுமே மறுக்கிறோம். முந்தைய காலகட்ட சினிமாவில், தயாரிப்பு தொழில் நன்றாக இருந்தது, ஆனால் இன்றைய சூழலில் தயாரிப்பு தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதே வேலையில் தயாரிப்பு தொழில் சார்ந்த மற்ற அனைத்து தொழில்களும் நன்றாக உள்ளதும் தாங்கள் நன்கு அறிந்ததே. இங்கு காலங்காலமாக முறையற்று வாங்கிவரும் பொது விதிகள் சார்ந்த சம்பளங்கள் சிலவற்றை தான் தற்போது முறைப்படுத்துகிறோம்.
நமக்கு இடையிலான உறவுக்கு என்றுமே அந்நிய சக்திகள் பங்கம் விளைவித்தது இல்லை என்பதையும், உங்களில் ஒரு அங்கமாக விளங்கும் டெக்னீஷியன் யூனியன் மட்டுமே என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம். மேலும் இந்த சங்கத்தின் தவறுகளுக்கு சாதகமாகவே சம்மேளனம் என்றும் இருப்பதை பார்க்கையில் ஒரு 40 ஆண்டுகால அமைப்பு, சினிமா தொழிலுக்காகத் தான் தொழிலாளர்களே தவிர்த்து தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல என்பதை மறந்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.
டெக்னீஷியன் யூனியன் எனும் அமைப்பு எல்லா காலகட்டத்திலும் தயாரிப்பு தொழிலுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது என்கிற அடிப்படையில் அந்த அமைப்புடன் மட்டும் எங்களால் என்றைக்கும் தொழில் உறவை தொடர முடியாது. நாங்கள் தொழிலாளர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. பெப்சியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தான். ஆனால் டெக்னீஷியன் யூனியனுடன் இனி இணைந்து செயல்பட முடியாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.