Published : 14,May 2021 07:33 AM
அசாமில் 18 காட்டு யானைகள் திடீர் மரணம்; மின்னல் தாக்கியதால் உயிரிழப்பா? வனத்துறை விசாரணை

அசாமில் ஒரே வனப்பகுதியில் 18 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் நகாவன் மாவட்டத்தில் உள்ள குண்டோலி வனப்பகுதியில் 18 யானைகளின் உடல்கள் இறந்த நிலையில் நேற்று மதியம் (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டன. 14 யானைகள் மலை உச்சியிலும், 4 யானைகள் மலை அடிவாரத்தில் இறந்து கிடந்தன. இதுபற்றிய தகவல் அறிந்து, வன அதிகாரிகள் அவற்றை மீட்டனர்.
தொடர்ந்து யானைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் மின்னல் தாக்கியதில் 18 யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே, யானைகள் உயிரிழப்புக்கான காரணத்தை உறுதியாக கூற முடியும் எனவும் பிரேதப் பரிசோதனை இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.