Published : 25,Jul 2017 03:31 PM
நடிகர் கமலால் ஜிஎஸ்டி பிரச்னை முடியவில்லையா? விஷால் பதில்

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சங்கத்தின் பொது செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது விஷால் பேசும்போது, தடை வாங்க வேண்டும் என்று போராடியவர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாக இருக்கும். இந்த நிலத்தில் எந்த சர்ச்சையும் இப்போது இல்லை. நடிகர் சங்க கட்டிடத்தின் அடித்தளப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்தக்கட்ட பணிகள் நாளை முதல் தொடங்கும். அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிந்து பிரமாண்ட விழாவோடு திறப்பு விழா நடக்கும். ஒரு நடிகர் தன் கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. கமல்ஹாசன் அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் ஒரு நடிகனாக அவருக்கு பின் இந்த விஷால் நிற்பான். கமல் அரசுக்கு எதிராக பேசுவதால் கேளிக்கை வரி பிரச்னை முடிவடையாமல் இருக்கிறது எனும் தகவல்களில் உண்மையில்லை. அந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கும்போது, திருட்டுதனமாக படங்களை வெளியிடும் தளங்களை நிச்சயம் தடுக்க முடியும். மத்திய அரசு நினைத்தால் ஒரே வருடம் அல்லது ஆறு மாதத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடுவதை தடுக்க முடியும்’என்றார் விஷால்.
நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள், குட்டிபத்மினி, சோனியா, லலிதா குமாரி, நந்தா, ராஜேஷ், உதயா உட்பட பலர் உடனிருந்தனர்.