
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களின் வாகனத்தை தாக்க முயன்ற பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தின் படோத் என்ற பகுதியில் பொதுமக்கள் சென்ற வாகனத்தை அடையாளம் தெரியாத இரு நபர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதில், சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்று அருகில் இருந்த ராணுவ முகாமுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து ‘குயிக் ரியாக்ஷன் டீம்’ (QUICK REACTION TEAM) எனப்படும் ராணுவப் பணியில் வேகமாக செயல்படும் குழுவினர் உடனே களத்தில் இறங்கினர்.
அந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் சுற்றித் திரிந்த ராம்பன், தோனா மற்றும் கந்தெர்பெல் ஆகிய பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் மர்ம நபர்கள் பதுங்கியிருந்து பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். இதில் கந்தெர்பெல் என்ற பகுதியில் மறைந்திருந்த ஒரு பயங்கரவாதி சுட்டுவீழ்த்தப்பட்ட நிலையில், பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.