
விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் பத்து தினங்களில் முழுமையாக முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெய்வேலி என்.எல்.சி பகுதியில் நடந்துவந்த படப்பிடிப்பில் இருந்து கடந்த வாரம் விஜய் விடைபெற்றார். அவரது காட்சிகள் முழுக்க முடிந்ததால் அவர் தனது ரசிகர்களுடன் ‘மாஸ் செல்ஃபி’ எடுத்து கொண்டு தனது படக்குழுக்கு பிரியாவிடை அளித்து சென்னை திரும்பினார். படப்பிடிப்புக்கு இடையில் அவரது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரை மூன்று போஸ்டர்களை இப்படக்குழு வெளியிட்டுள்ளது.
இதனிடையே கடந்த 14 ஆம் தேதி காதலர் தின பரிசாக ‘குட்டிக் கதை’ பாடல் வெளியானது. அந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்தப் பாடல் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே இருந்தது. 'Let me sing a kutti story pay attention listen to me' என துவங்கும் இப்பாடல் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக இருந்தது. இந்தப் பாடலை இதுவரை 15,797,006 பேர் பார்த்து ரசித்துள்ளனர். ஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்களைக் கடந்துள்ளதால் படக்குழு பெரிய சந்தோஷத்தில் உள்ளது. ‘குட்டிக்கதை’ பாடலுக்கான ஆல்பத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. ஆகவே இன்னும் பத்து நாட்களில் இதற்கான படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைய உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளை இயக்குநர் தொடங்க இருக்கிறார். அதனை அடுத்து இந்தப் படத்தை வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜயின் அடுத்த புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது.