விரைவில் வாட்ஸப் மூலம் மெட்ரோ டிக்கெட்! மெட்ரோ பணிகளாலான சிரமம் மாறும் - மெட்ரோ இயக்குனர்

விரைவில் வாட்ஸப் மூலம் மெட்ரோ டிக்கெட்! மெட்ரோ பணிகளாலான சிரமம் மாறும் - மெட்ரோ இயக்குனர்
விரைவில் வாட்ஸப் மூலம் மெட்ரோ டிக்கெட்! மெட்ரோ பணிகளாலான சிரமம் மாறும் - மெட்ரோ இயக்குனர்

மெட்ரோ கட்டுமான பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வருத்தமாக ஒன்றாக இருந்தாலும், அவை தற்காலிகமானது தான் என்றும் ஒரு வருடத்தில் மெட்ரோ மேம்பால பணிகள் நிறைவு பெற்றவுடன், மெட்ரோ பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வெகுவாக குறையும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திலிருந்து டி.எல்.எப் ஐடி பூங்கா வரை குளிர்சாதன மினி டெம்போ வேன் இயக்கப்பட உள்ளது. டிஎல்எப் போரூர் வளாகத்தில் ஒரு லட்சம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில். அவர்கள் அதிக அளவில் மெட்ரோ ரயில் சேவையையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போரூர் ராமாவரம் நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள், நேரடியாக டிஎல்எப் ஐடி பூங்காவிற்கு வரும் வகையில் மெட்ரோ கனெக்ட் எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் டி.எல்.எப் சைபர் சிட்டி வரை 4 குளிர்சாதன பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்பட உள்ளன. குறைந்த பட்ச தொகையாக 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. காலை ஆறு மணிக்கு தொடங்கும் மெட்ரோ கனெக்ட் சேவை இரவு 10 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக், சென்னை மெட்ரோ ரயிலில் அமைப்பு மற்றும் இயக்கத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு டெம்போ வேன் சேவையை துவக்கி வைத்தனர். பின்னர் மேடையில் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக், பயணிகள் தங்கள் கடைசி கட்ட பயணம் வரை, மெட்ரோ நிர்வாகமே பொறுப்பேற்கும் வகையிலான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் 'மெட்ரோ கனெக்ட்'.

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளின் வேலை இடங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சிற்றுந்து, மினி ஆட்டோ போன்றவை இயக்கப்பட்டு வந்தாலும், இது போன்ற மெட்ரோ கனெக்ட் திட்டம் பயணிகளின் பயண களைப்பை குறைக்கும். மேலும் இதுபோன்று திட்டங்கள் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப வளாகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக சித்திக் தெரிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்திக், ”வருங்கால சேவைக்காக தற்போது போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிக்கிறார்கள் என்பது தெரிகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை என்பது வருங்காலத்திற்கான திட்டம். 2026ல் சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2 நிறைவடைந்து நகரில் முக்கிய பகுதிகள் இணைக்கப்பட உள்ளது. பணி செய்யும் இடம், பண்டகப் பொருட்கள் விற்கும் பகுதிகள், நகரின் முக்கிய போக்குவரத்துகள் மெட்ரோவுடன் இணைக்கப்படுகிறது. பயணிகளின் கடைசி கட்ட பயணம் வரை மெட்ரோ பொறுப்பேற்று கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. பயணிகளை மெட்ரோ நிலையங்களில் இருந்து முக்கியப் பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான பணியில் மினி வேன், சிற்றுந்து ஈடுபடும்.

மெட்ரோ கட்டுமான பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வருத்தமான ஒன்றாக இருந்தாலும், அவை தற்காலிகமானதுதான். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த மினி டெம்போ வேன் சேவை பயனுள்ளதாக இருக்கும். பயணிகளின் கடைசி கட்ட பயணம் வரை மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

மெட்ரோ கனெக்ட் திட்டம் மூலம் வேலையிடங்களுக்கு பயண சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுரங்க ரயில் பாதை மற்றும் மேம்பால ரயில் பாதை, மேம்பால ரயில் பாதைகள் இரண்டாவது கட்ட பணியாக நடைபெற்று வருகிறது. சுரங்க ரயில் தோண்டும் பணி கடினமாக உள்ளது. ஆற்காடு சாலை, காளியம்மன் கோவில் தெரு போன்ற இடங்களில் அகலம் குறைவாக உள்ளது. சுரங்க பணி நடைபெறும் இடங்களில் பயனாளர்களின் கட்டடம் பாதிக்கப்பட்டால், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கட்டிக் கொடுக்கப்படும். கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டாலும் மெட்ரோ நிர்வாகம் சரி செய்து கொடுக்கும்.

சென்னை மெட்ரோ ரயில் செயலியில் அவ்வப்போது பிரச்னைகள் வருவதாக புகார்கள் வரும் நிலையில் நிரந்தர தீர்வு காணப்படும். Whatsapp மூலம் மெட்ரோ பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப் படுத்தப்படும்.

கோவையில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கையில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மதுரையிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசு ஒப்புதல் கொடுத்தவுடன் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com