‘ராகிங் கொடுமை, +2வில் 899 மதிப்பெண் தான்.. ஆனாலும் இன்று ஐஏஎஸ்’ - திருச்சி ஆட்சியர்

‘ராகிங் கொடுமை, +2வில் 899 மதிப்பெண் தான்.. ஆனாலும் இன்று ஐஏஎஸ்’ - திருச்சி ஆட்சியர்
‘ராகிங் கொடுமை, +2வில் 899 மதிப்பெண் தான்.. ஆனாலும் இன்று ஐஏஎஸ்’ - திருச்சி ஆட்சியர்

கல்லூரிப் படிப்பில் ராகிங் கொடுமைக்கு ஆளானேன் என்றும், 899 மார்க் பெற்றும் இன்று ஐ.ஏ.எஸ். ஆக இருக்கிறேன் எனவும், கடவுளாக பார்க்கும் துறை மருத்துவத் துறை என மருத்துவ மாணவர்களிடம் மனம் திறந்து திருச்சி ஆட்சியர் பேசியுள்ளார்.

திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், புதிய மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு, துணை முதல்வர் அர்ஷியா பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக சேர்ந்த மாணவர்கள் வெள்ளை அங்கியுடன் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மருத்துவ மாணவர்களிடம் பேசியபோது, “கல்லூரிப் பயிலும் மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் தவறான வழிக்கு செல்லக்கூடிய வயது இது. இதனை பேலன்ஸ் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். முயற்சியே செய்யாமல் வெற்றி, பலன் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

மருத்துவர் தொழிலில் எப்போதும் உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். ஆனால், வேறு எந்த தொழிலும் இந்த அளவிற்கு மன நிறைவு இருக்காது. எதை வேண்டுமானாலும் வாங்கலாம், தள்ளிப் போடலாம். ஆனால் ஒன்றை மட்டும் வாங்கவும் முடியாது, தள்ளிப் போடவும் முடியாது. அது தான் மக்கள் உயிர்.

மேலும், பன்னிரண்டாம் வகுப்பில் நான் 899 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன். கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவே கடினம் என குறிப்பிட்டார்கள். அதனை முடித்து முதல் தரத்தில் டிஸ்ட்ரிக்ஷன்லில் தேர்ச்சி அடைந்தேன். பிறகு நான்கு வருடம் பணிபுரிந்தேன். அதன் பிறகு ஐஏஎஸ் தேர்வு எழுதி மாவட்ட ஆட்சியராக தற்போது பொறுப்பேற்றுள்ளேன்.

இதே போல் 2004 திருச்சி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர், தற்பொழுது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். 24/7 மணி நேரமும் எல்லா நாட்களிலும் வேலை என்பது சில துறைகளுக்கு மட்டுமே இருக்கும். அதில் பணியில் திருப்தி ஏற்படுவதில் முதலில் உள்ளது மருத்துவத்துறை. மருத்துவ மாணவர்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்ற கிராமங்கள், குடிசைகள் நிறைய இருக்கின்றது. உங்களுக்காக ஏழ்மையான மக்கள் காத்து கொண்டுள்ளனர்.

ஊரக பகுதிகளில் எத்தனையோ மருத்துவர்கள் தலைசிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்கள். அதனை ரோல் மாடலாக வைத்து நீங்களும் பணியாற்ற வேண்டும். கடினமாக உழைக்கும் மருத்துவத்துறையினரை ஆசிரியர்கள், பொறியாளர்களை காட்டிலும் கடவுளாக பார்க்கும் துறை. நான் பள்ளி பருவத்தை முடித்துவிட்டு கல்லூரியில் செல்லும் முதல் நாளே ரயில் நிலையத்தில் நடக்கும் நிகழ்வுகளை செய்து ராகிங் கொடுமைக்கு ஆளானேன். இரண்டாம் நாளிலிருந்து அது மாறிவிட்டது.

ஊரக பகுதியிலுள்ள சில மாணவர்கள் வீட்டிலேயே இருந்து படித்து மருத்துவராகி, தற்பொழுது தான் வெளி உலகத்திற்கு வந்திருப்பீர்கள். மருத்துவம் பயின்று முடித்து சமூக சூழ்நிலைக்கு வரும் பொழுது ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளது. சமூகத்திற்கு செயலாற்றுவது தான் முக்கியம். இத்துறையில் புகழ், பணம் சேர்ப்பதை விட சேவை செய்தால் புகழும் பணமும் தானே வரும்.

இன்று 157 பேர் கடவுளாக திகழ்கிறீர்கள். இந்த 157 பேரை மருத்துவ மாணவர்களாக உருவாக்கிய பெற்றோர்கள் இங்கே உள்ளார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதமின் இந்த பேச்சு தங்கள் மத்தியில் நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் கொடுத்ததாக மாணவர்கள் தரப்பில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com