குற்றம்

கன்னியாகுமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு போலீசார் வலை

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை குழித்துறை மகளிர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் ரீஜன். (19) இவர், நாகர்கோவில் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல் இவரது சகோதரியும் கல்லூரியில் படித்து வரும் நிலையில், மாலை நேரம் தனது வீட்டில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார்.

அந்த வட்டாரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் அங்கு டியூசனுக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள்களான 6 மற்றும 4 வயது சிறுமியரும் அங்கு டியூஷனுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், 6 வயது சிறுமியை, ஓரிரு நாட்கள் தனியாக அழைத்துச் சென்ற ரீஜன், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் ரீஜன் மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் டிக்டாக் பிரபலமாக அறியப்படும் ரீஜனும் அவரது குடும்பத்தாரும் தலைமறைவான நிலையில், குழித்துறை மகளிர் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.